| ADDED : ஜூலை 12, 2024 12:13 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் கொளக்கியம்மன், மாரியம்மன், பொன்னியம்மன் கோவில்களில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பாண்டிற்கான திருவிழா நேற்று துவங்கியது.முதல் நாளான நேற்று காலை கொளக்கியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பொங்கல் வைத்தலும், மாலை 5:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்வும், தொடர்ந்து பூங்கரகம் புறப்பாடும் நடந்தன.இரண்டாம் நாள் உற்சவமான இன்று காலை 10:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் பூங்கரகம் புறப்பாடும், இரவு தெருக்கூத்தும் நடைபெற உள்ளன.மூன்றாம் நாள் உற்சவமான நாளை பிற்பகல் 12:30 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு மாரியம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு நாடகமும் நடைபெற உள்ளன.நிறைவு நாளான நாளை மறுதினம் காலை 10:00 மணிக்கு பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பிற்பகல் 12:00 மணிக்கு நடுத்தெரு சுந்தர விநாயகர் கோவில் அருகில் சிறப்பு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு பொன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெற உள்ளன.