15வது மத்திய நிதிக்குழு மானியத்தில் குடிநீர் பணிகள் தேர்வு செய்ய அறிவுரை
காஞ்சிபுரம்:மத்திய நிதிக்குழு மானியத்தில், குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி, ஊராட்சிகள் ஆகிய மூன்று ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் இயங்கி வருகின்றன.மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை, குடிநீர், கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, ஆண்டிற்கு ஒரு முறை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியை, இரு தவனைகளாக பிரித்து, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம் உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்கிறது. இதில், 30 சதவீதம் துாய்மை மற்றும் சுகாதாரம் பணிகள். குடிநீர் வளர்ச்சி பணிகளுக்கு, 30 சதவீதம். அரசு கட்டடம் மறுசீரமைப்பு செய்வதற்கு, 40 சதவீதம் என மொத்தம், 100 சதவீத நிதியை பயன்படுத்தி, பல வித வளர்ச்சி பணிகள் செய்து வருகின்றன. கடந்த, 2024-- - 25ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகங்களுக்கு, 47.12 கோடி ரூபாய் 15வது மத்திய நிதிக்குழு மானியமாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், 2,625 பணிகள் ஒதுக்கீடு செய்து, நடந்து வருகிறது.நடப்பு, 2025--- 26ம் நிதி ஆண்டிற்கு, புதிய பணிகள் தேர்வு செய்ய அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஊராட்சி செயலர்கள் ஆகியோர் பணிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்து ஆண்டை போல, நடப்பு நிதி ஆண்டும் சாலை போடும் பணி, குடிநீர் பணிகள் என, பல்வேறு விதமான பணிகளை ஊரக வளர்ச்சி துறையினர் தேர்வு செய்து, மாநில ஊரக வளர்ச்சி முகமைக்கு பட்டியல் எடுத்து சென்று உள்ளனர்.இதில், 70 சதவீத பணிகள் சாலைகள் மற்றும் கட்டடங்களாகவே இருந்ததால், மாநில ஊரக வளர்ச்சி உயரதிகாரிகள், பணி பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. குடிநீர் சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படி வேறு ஒரு புதிய பட்டியலை தயாரித்து அனுப்பும் படி மாநில ஊரக வளர்ச்சி துறையினர் திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் மாவட்ட ஊராட்சி, வட்டார நிர்வாகம், ஊராட்சிகளில் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.