| ADDED : ஆக 07, 2024 12:50 AM
பூந்தமல்லி:ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த வழக்கில், ரவுடிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.சென்னை, அம்பத்துார் அடுத்த பாடி, புதுநகர் பகுதியை சேர்ந்தவர் அழகுமுருகன், 25. ஆட்டோ ஓட்டுனர். கடந்த 2019ம் ஆண்டு பாடிபுதுநகரில் பைக்கில் சென்றபோது, மர்ம கும்பலால் அழகுமுருகன் வெட்டி கொலை செயப்பட்டார். ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பாடிபுதுநகரை சேர்ந்த ரவுடிகள் மோகன்,25, டேனியல்,23 ஆகியோர், முன்விரோதம் காரணமாக அழகுமுருகனை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ரவுடிகள் இருவருடன், 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மூவர் என ஐந்து பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3ல், நீதிபதி பாலகிருஷ்ணன் முன் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் மோகன், டேனியல் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், இருவருக்கும் முறையே 1,600 மற்றும் 11,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று சிறுவர்களில் ஒருவர், 2023ம் ஆண்டு இறந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மற்ற இரண்டு சிறுவர்கள் மீதும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.