கால்வாய் கட்டுமான பணியால் சோமங்கலம் சாலையில் நெரிசல்
சோமங்கலம்:தாம்பரம் - சோமங்கலம் சாலையை பயன்படுத்தி, தினமும், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இந்த சாலையில், வரதராஜபுரம் முதல் கன்னடப்பாளையம் வரை சாலை உள்வாங்குவதை தடுக்க, கான்கிரீட் தடுப்பு சுவர் மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக சாலையோரம் 12 அடி பள்ளம் தோண்டி, தடுப்பு சுவர் கட்டுமான பணி நடப்பதால், கன ரக வாகனங்கள் செல்ல தடை செயய்யப்பட்டு உள்ளது. தவிர, சாலை குறுகலாகி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேதனைக்குள்ளாகின்றனர். மேலும், கட்டுமான பணியின் போது அள்ளப்பட்ட மண், சாலையில் சிதறி கிடக்கிறது. மழை பெய்தால் சகதி சாலையாக மாறி விடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர்.இந்த பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.