காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரையை சுற்றிலும், 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் சாலை, ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் உள்ளது.இச்சாலை வழியாக, சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து மின் நகர், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அப்பகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர் அதிகளவு செல்லும் இச்சாலையில், சின்ன வேப்பங்குளக்கரை ஒட்டியுள்ள பகுதியில், சிமென்ட் சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டு, சாலை உடைந்த நிலையில் உள்ளது.இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை உடைந்த பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல, சாலையோரம் செல்லும் அதிக எடை கொண்ட கனரக வாகனங்களால், குளக்கரையோரம் நிலச்சரிவு ஏற்பட்டு, வாகனம் குளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த பழைய சிமென்ட் சாலையை அகற்றிவிட்டு, புதிதாக சாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.