இ -- சேவை மையத்தில் அங்கன்வாடி மையம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம்,திருமுக்கூடலில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டியஅங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்தது. விபத்து அபாயம் தடுக்கும் பொருட்டு சேதமான அக்கட்டடம் ஊராட்சி சார்பில், சில மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது.இதையடுத்து, திருமுக்கூடல் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள இ - சேவை மைய கட்டடத்தில், தற்போது அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில், 23 குழந்தைகள் பயில்கின்றனர்.ஊராட்சி நிர்வாக பணிகளுக்கான தேவைக்கு, எப்போது வேண்டுமானாலும் இ - சேவை மைய கட்டடத்தை பயன்படுத்தக்கூடும்.இதனால், திருமுக்கூடலில், அங்கன்வாடி மையத்திற்கு என, புதிய கட்டட வசதி ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.