ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மலைப்பட்டு கங்கை அம்மன் கோவில் குளம் அருகில், மாகண்யம் செல்லும் சாலையில் தடுப்பு இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையில், மலைப்பட்டில் இருந்து, மாகண்யம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. மாகண்யம், அழகூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் இந்த சாலையின் வழியாக, ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், மற்ற தேவைகளுக்காக என, 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் நாள்தோறும் சென்று வருகின்றனர்.இந்த சாலையில், மலைப்பட்டு கங்கையம்மன் கோவில் அருகில், கோவில் குளம் உள்ளது. இக் குளத்தின் ஓரம் செல்லும் பிரதான சாலையோரம் தடுப்பு இல்லை. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எதிர்பாராத விதமாக, குளத்தில் விழும் வாய்ப்பு உள்ளது.இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிடும் போது, தடுப்பு இல்லாததால், குளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி, வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், குளத்தின் அருகில் உள்ள சாலையோரம் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.