| ADDED : ஜூன் 24, 2024 05:31 AM
காஞ்சிபுரம்: சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்பட உள்ளது.இதற்கு தேவைப்படும் மொத்தம், 5,400 ஏக்கர் நிலத்தில், 3,750 ஏக்கர் நிலம் தனியார் வசம் உள்ளன. பரந்துார் விமான நிலைய திட்ட நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் முகமையான, 'டிக்கோ' என, அழைக்கப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது.பரந்துார் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராம மக்கள், 700 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.விவசாயம், நீர் நிலைகளை காக்க பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். கிராமத்தினர் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கி உள்ளது.சொந்த ஊரில் வாழ தகுதி இல்லாததால், தமிழகத்தை விட்டு ஆந்திர மாநிலம் பகுதியில் தஞ்சம் போக ஏகனாபுரம் கிராமத்தினர் முடிவு செய்தனர். இதற்காக இன்று, சித்துார் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கவும் இருந்தனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் துக்கத்தை அனுசரிக்கும் விதமாக இன்று சித்துார் செல்ல விருந்த ஏகனாபுரம் போராட்டக் குழுவினரின் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.சித்துார் கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் மற்றொரு நாள் அறிவிக்கப்படும். அது வரையில், இரவு நேர போராட்டம் தொடர்ந்து நடக்கும் என, ஏகனாபுரம் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.