| ADDED : ஜூன் 08, 2024 04:32 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகரை ஒட்டி செல்லும் வேகவதி ஆறு, பாலாற்றின் கிளை ஆறாக, 26 கி.மீ., துாரம் பாய்கிறது. தாமல் அருகே துவங்கும் வேகவதி ஆறு, காஞ்சிபுரம் நகரை கடந்து, தாங்கி கிராமத்தில் மீண்டும் பாலாற்றில் இணைகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில் செல்லும் வேகவதி ஆறு மோசமான நிலையில் உள்ளது. மேலும், ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்து வருகிறது. ஏற்கனவே, 1,400 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முடியாமல், மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது. இந்நிலையில், வேகவதி ஆற்றில், கோரை புற்கள், 6 அடி உயரம் வரை வளர்ந்து நிற்கிறது.குப்பை கழிவுகளை பலரும் ஆற்றுக்குள்ளேயே கொட்டுவதால் மாசடைந்து வருகிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போர், கழிவுநீரை ஆற்றில் விடுவதால், மேலும் மாசடைகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய நீர்வளஆதாரத் துறையினர் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆண்டுதோறும் பருவமழை துவங்கும்போது, வேகவதி ஆற்றின் சில இடங்களில் கோரை புற்களை மட்டும் அப்புறப்படுத்துகின்றனர். மற்ற நாட்களில், மோசமான நிலையிலேயே வேகவதி ஆறு காட்சியளிக்கிறது.எனவே, வேகவதி ஆற்றை மீட்டெடுத்து, குடிநீர் ஆதாரமாக மாற்ற நீர்வள ஆதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.