| ADDED : ஜூலை 08, 2024 05:30 AM
சென்னை: டி.என்.சி.ஏ., எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மகளிருக்கான பிரேயர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள், தரமணி மற்றும் செங்குன்றம் தனியார் கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகின்றன. மாநிலம் முழுதும் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், ரெட் ரேஞ்சர்ஸ் அணியை எதிர்த்து, சில்வர் ஸ்டிரைக்கர்ஸ் அணி களமிறங்கியது.அந்த அணி 28.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களில் ஆட்டமிழந்தது. ரெட் ரேஞ்சர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீநிதி 14 ரன்கள் விட்டுக்கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை பறித்தார்.பின், சுலப இலக்குடன் களமிறங்கிய ரெட் ரேஞ்சர்ஸ் அணி வீராங்கனையர், எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.இதனால் அந்த அணி 21.1 ஓவரில் 71 ரன்களில் ஆட்டமிழக்க, சில்வர் ஸ்டிரைக்கர்ஸ் அணி 17 ரன்களில் அசத்தல் வெற்றி பெற்றது. ரெட் ரேஞ்சர்ஸ் அணியின் ஸ்ரீநிதி ஆட்ட நாயகி விருது பெற்றார்.மற்றொரு போட்டியில், பர்பிள் பிளேசர்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ப்ளூ அவென்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.