காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், உரிய முகவரியில் வாக்காளர்கள் இல்லாததால், 65,000 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவையடுத்து, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் திருத்தப் பணிக்காக வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், புகைப்படம் அச்சடிக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று, கடந்த 4ம் தேதி முதல் வழங்கி வருகின்றனர். இப்பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,401 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளில் கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகின்றனர். 14.22 லட்சம் வாக்காளர்கள் அவர்களை கண்காணிக்க 145 மேற்பார்வையாளர்களும், 145 கூடுதல் மேற்பார்வையாளர்களும் மற்றும் மண்டல வாரியாக துணை கலெக்டர் நிலையில் 10 கண்காணிப்பு அலுவலர்களும், இவர்களை கண்காணிக்க நான்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள், 11 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளனர். டிஜிட்டல் மயமாக்கல் பணிகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு, நிரப்பப்பட்ட படிவங்கள் திரும்ப பெற்று மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மொத்தமுள்ள 14.22 லட்சம் வாக்காளர்களில், 13.57 லட்சம் வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 65,000 பேருக்கு கணக்கெடுப்பு படிவங்கள் கொண்டு சென்றபோது, அந்த முகவரியில் வாக்காளர்கள் இல்லாததால், கணக்கெடுப்பு படிவங்கள் வழங்க முடியாமல் உள்ளது. உதவி எண்கள் இதனால், கணக்கெடுப்பு படிவங்கள் கிடைக்காத நபர்கள், தங்கள் பகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட தொடர்பு உதவி எண் 044- 1950 மற்றும் 044 -27237107 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை, பாகம் வாரியான காஞ்சிபுரம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் விபரங்களை, https://www.erolls.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கவும் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.