காஞ்சி பஸ் நிலைய சாலையில் மண் அரிப்பால் ஏற்பட்ட பள்ளம்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இதில், பேருந்து நிலையத்தின் பொது கழிப்பறை மற்றும் வேலுார் பேருந்து நிறுத்தம் அருகில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், பேருந்தை பிடிக்க ஓடும் பயணியர் கவனகுறைவாக பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். அதேபோல, இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.