உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெடுஞ்சாலை மைய தடுப்பில் விளம்பர பேனர் வல்லக்கோட்டையில் விபத்து அபாயம்

நெடுஞ்சாலை மைய தடுப்பில் விளம்பர பேனர் வல்லக்கோட்டையில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில், நெடுஞ்சாலை மையத்தடுப்பில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்தலம், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்கோவிலில், 7 அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும், அரசு பேருந்து வாயிலாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தின் இருப்புறங்களிலும் உள்ள நெடுஞ்சாலை மையத் தடுப்புகளில் வரிசையாக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியர், விளம்பர பலகைகள் தங்கள் மேல் விழும் அச்சத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வரிசையாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், காற்று வேகமாக வீசும் போது, சரிந்து சாலையில் விழும் நிலையில் உள்ளது. இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, போக்குவரத்து மற்றும் பயணியருக்கு இடையூறாக, நெடுஞ்சாலை மையத்தடுப்பில் வைக்கப் பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி