பாதாள சாக்கடை பிரச்னை தீரவில்லை அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் தர்ணா
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், பாதாள சாக்கடை பிரச்னை தீரவில்லை என அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு கூறி, மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நேற்று நடத்தினார். காஞ்சிபுரம் மாநகராட்சி யில் பாதாள சாக்கடை பிரச்னை தொடர்ந்து நீடிக்கிறது. இதில், 23வது வார்டில் மாநகராட்சியிலேயே அதிக பிரச்னை நீடிப்பதால், இந்த வார்டில் வசிப்போர் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். வார்டு கவுன்சிலர் புனிதா பல கட்ட போராட்டங்களை நடத்தினார். மாநகராட்சி கூட்டத்திலும் பாதாள சாக்கடை பிரச்னையை தொடர்ந்து பேசியுள்ளார். இருப்பினும், வார்டில் உள்ள வீடுகளில் கழிவுநீர் வீடுகளுக்குள் திரும்பி வருவது போன்ற பிரச்னைகள் நீடிக்கின்றன. இதனால், அ.தி.மு.க., கவுன்சிலரான புனிதா, கணவர் சம்பத் துடன் சேர்ந்து, மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை நேற்று நடத்தினார். காலை 10:00 மணிக்கு துவங்கிய போராட்டம், மாலை 5:00 மணி வரை நீடித்தது. இடையே, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம், புனிதா, சம்பத்திடம் பேச்சு நடத்தினார். நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இருப்பினும், மாலை வரை மாநகராட்சி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.