| ADDED : ஜன 02, 2026 05:22 AM
உத்திரமேரூர்: காட்டாங்குளத்தில், சேதமடைந்த அகத்தீஸ்வரர் கோவிலை புனரமைக்க, தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தில், தொல்லியல் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்த கொடிமரம், பலிபீடம் மற்றும் உள் சுற்றிலும் இருந்த சுவாமிகளின் சன்னிதிகளும், பின்புறத்தில் இருந்த தெய்வங்களுக்கான தனி சன்னிதிகளும், 30 ஆண்டுகளுக்கு முன் இடிந்து சேதமானது. நந்திக்கான சன்னிதியை தவிர, கோவில் வளாகத்தில் இருந்த வெளி மண்டபமும் இடிந்துள்ளது. தற்போது தினமும் ஒரு கால பூஜை இக்கோவிலில் நடந்து வருகிறது. இந்த கோவிலை சீரமைத்து வழிபாட்டிற்கு கொண்டுவர பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். அதையடுத்து, தொன்மை மாறாமல் இக்கோவிலை புனரமைக்க, தொல்லியல் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இக்கோவிலை புனரமைப்பது குறித்து, இந்திய தொல்லியல் துறை ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர் ஜெபகரன் மற்றும் அக்கோவில் செயல் அலுவலர் சரண்யா, காட்டாங்குளம் ஊராட்சி தலைவர் செல்வகுமரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் பட்டியலில், காட்டாங்குளம் அகத்தீஸ்வரன் கோவிலை இணைத்து, ஹிந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியின் பேரில், விரைவில் புனரமைப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளதாக, அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.