| ADDED : பிப் 04, 2024 06:02 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, குருசாமி நகரில் 2016 - 17ல் அம்ரூத் திட்டத்தின் கீழ், 43.91 லட்சம் ரூபாய் செலவில், செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், இரவில் ஒளிரும் மின்விளக்கு, நடைபயிற்சிக்கான நடைபாதை, அழகிய புல்தரை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது.கொரோனா ஊரடங்குக்கு பின் மாநகராட்சி நிர்வாகம், பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், செயற்கை நீரூற்று, ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்கு உள்ளிட்டவை பழுதுடைந்து உடைந்த நிலையில் உள்ளன.பூங்காவில் களை செடிகள் புதர்போல மண்டியுள்ளதால், புதருக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்துள்ளதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாடின்றி வீணாகி வருகிறது.எனவே, பூங்காவில் மண்டிகிடக்கும் புதர்களை அகற்றி, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்குகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.