உத்திரமேரூர்: உத்திரமேரூரில், நகர கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு மீண்டும் உரம் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் நகர கூட்டுறவு வங்கியில், சுற்றுவட்டார விவசாயிகள் 5,000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். அவ்வப்போது, விவசாயிகள் இந்த வங்கியில் விவசாய கடன் பெற்றும், உரங்கள் வாங்கியும் வருகின்றனர். கடந்த 2019-ல், உத்திரமேரூர் நகர கூட்டுறவு வங்கி, நிர்வாக காரணங்களுக்காக உர விற்பனையை நிறுத்தியது. அதிலிருந்து, விவசாயிகள் பயிருக்கு தேவையான உரங்களை தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கி வந்தனர். இது தொடர்பாக, ஐந்து ஆண்டுகளாக விவசாயிகள், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன், கலெக்டர் கலைச்செல்வி, உத்திரமேரூர் நகர கூட்டுறவு வங்கியில் உர விற்பனையை துவக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, உத்திரமேரூர் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகத்தினர், யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகிய உரங்களை, விவசாயிகளுக்கு நேற்று விற்பனை செய்தனர். இது குறித்து உத்திரமேரூர் நகர கூட்டுறவு வங்கி அலுவலர் ஒருவர் கூறியதாவது: உத்திரமேரூர் நகர கூட்டுறவு வங்கியில், நிர்வாக காரணங்களுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உர விற்பனை, 2019ல் நிறுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் உர விற்பனையை துவக்கி உள்ளோம். எனவே, உத்திரமேரூர் சுற்றுவட்டார விவசாயிகள் வங்கியை அணுகி, உரங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.