உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வாலாஜாபாதில் அவசர சிகிச்சை பிரிவு: ஜனவரியில் திறக்க முடிவு

 வாலாஜாபாதில் அவசர சிகிச்சை பிரிவு: ஜனவரியில் திறக்க முடிவு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அரசு பொது மருத்துவமனையில், புதிய கட்டுமான பணி, 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், வரும் ஜனவரியில் அவசர சிகிச்சை பிரிவு துவக்கப்பட உள்ளது. வாலாஜாபாதில் இயங்கும் வட்டார அரசு பொது மருத்துவமனை, 60 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வருகிறது. வாலாஜாபாத் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு, 500 பேர் வரை புறநோயாளிகளாகவும், 20 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. இதனால், விபத்து உள்ளிட்ட அவசர கால பாதிப்புகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அம்மாதிரியான நேரங்களில், கால விரயம் மற்றும் சில சமயங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன. எனவே, வாலாஜாபாதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு மருத்துவ வசதி ஏற்படுத்த பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு ஏற்படுத்த தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தின் கீழ், 4.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த டிசம்பரில் துவக்கப்பட்டு, தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இதுகுறித்து, வாலாஜாபாத் மருத்துவ அலுவலர் ஒருவர் கூறியதாவது: வாலாஜாபாத் பொது மருத்துவமனையில், அவசர மருத்துவ சிகிச்சை பிரிவிற்கான இரண்டு அடுக்கு கட்டடப் பணி நடந்து வருகிறது. தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. வரும் ஜனவரியில் அவசர சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்