அரும்புலியூர் - கரும்பாக்கம் சாலையை அகலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
அரும்புலியூர்:அரும்புலியூர் - கரும்பாக்கம் சாலையை அகலப்படுத்த, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் - சாலவாக்கம் சாலையில், அருங்குன்றம் அருகே பிரிந்து அரும்புலியூர் வழியாக கரும்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. அரும்புலியூர், சீத்தாவரம், பழவேரி உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலை வழியை பயன்படுத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சாலவாக்கம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில், அரும்புலியூர் துவங்கி, கரும்பாக்கம் வரையிலான 2 கி.மீ., சாலை குறுகியதாக உள்ளது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்களை எளிதாக கடந்து செல்ல முடியமால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: அரும்புலியூர் - கரும்பாக்கம் சாலையின் இரு புறமும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் நெல் அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்கள் அவ்வப்போது இயக்கப்படுகின்றன. குறுகிய இந்த சாலையில் நெல் அறுவடை போன்ற வாகனங்களை இயக்குவது பெரும் சிரமமாக உள்ளது. எனவே, இச்சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.