உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தி.மு.க., கவுன்சிலர்களை சமாளிப்பதில் காஞ்சி மேயருக்கு கடும் நெருக்கடி மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏன்?

தி.மு.க., கவுன்சிலர்களை சமாளிப்பதில் காஞ்சி மேயருக்கு கடும் நெருக்கடி மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏன்?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 கவுன்சிலர்களில், 33 பேர் தி.மு.க.,வும், 8 பேர் அ.தி.மு.க.,வும், 8 பேர் சுயேச்சையாகவும், ஒருவர் காங்கிரஸ், ஒருவர் பா.ஜ., சார்பில் உள்ளனர். தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமி பொறுப்பேற்றது முதலே, கவுன்சிலர்களின் எதிர்ப்பு, உட்கட்சி பூசல், கமிஷன் விவகாரம் போன்றவைகளால், மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு பிரச்னைகள் நடந்தபடி உள்ளன.

வாக்குவாதம்

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், அண்ணா அரங்கில் மாடியில், நேற்று முன்தினம் காலை மேயர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. இதில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதை வடிகால் திட்டம் பற்றி கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும், கமிஷனரின் செயல்பாடு மீது அதிருப்தி அளிப்பதாக கூறி கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.மேலும், மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய, 21 தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்து மேயர் மகாலட்சுமி அறிவித்தார்.ஆனால், தீர்மானங்கள்ரத்து செய்யப்பட்டதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும் எனக்கூறி, காங்., கட்சியை சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன், தி.மு.க., - அ.தி.மு.க., என அனைத்து கட்சி கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒத்திவைப்பு@

@கவுன்சிலர்களிடையே மேயர் மகாலட்சுமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இறுதியாக, மேயர் கணவர் யுவராஜூம் பேச்சு நடத்தினர். மாநகராட்சி கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாகவும், நாளை மாநகராட்சி கூட்டம் நடக்கும் என, மேயர் மகாலட்சுமி அறிவித்ததை தொடர்ந்து, கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.ரத்து செய்யப்பட்ட மாநகராட்சி கூட்டம் நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க., என, 13 கவுன்சிலர்கள் மட்டுமே மாமன்ற கூட்டத்திற்கு வந்திருந்தனர்.கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் வருவார்கள் என நீண்ட நேரம் காத்திருந்த மேயர் மகாலட்சுமி, ஒரு மணி நேரம் கழித்து, கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால், நேற்றைய கூட்டமும் நடைபெறாமல் போனது.மாநகராட்சி நிர்வாகத்தில், 33 கவுன்சிலர்களுடன், தி.மு.க., தரப்புக்கு பெரும்பான்மை இருந்தும், மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியாத நிலை நீடிக்கிறது.அண்ணா அரங்கம் பின்புறம் உள்ள மண்டல அலுவலகத்தில், தி.மு.க., மட்டுமல்லாமல், அ.தி.மு.க., உட்பட பிற கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் நேற்று ஆலோசனை நடத்தி, கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

ஒத்துழைப்பு இல்லை

ஆளுங்கட்சி கவுன்சிலர்களின் செயல்பாடுகள் பற்றி, மாவட்ட செயலர் சுந்தர், அமைச்சர் நேரு என கட்சியின் மேலிடம் வரை கொண்டு சென்ற பின்னும், தி.மு.க., கவுன்சிலர்கள், மேயர் தரப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.கடந்த டிசம்பர் மாதமும், தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து, மேயர் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது போல, இப்போதும் மாநகராட்சி கூட்டம் நடத்த முடியாமல் சிக்கல் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை