திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் காஞ்சிபுரம் ரேஷன் கடை
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வேகவதி தெருவில் கட்டுமானப் பணி முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும் ரேஷன் கடை கட்டடம் திறக்கப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி வேகவதி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்காக, ரேஷன் கடை வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், 2023- 24ம் ஆண்டு, சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 15.25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த நிதியில், வேகவதி தெருவில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. கட்டுமானப் பணி முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படல்லை. எனவே, வேகவதி தெருவில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ள ரேஷன் கடையை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.