காஞ்சிபுரம் : ஊராட்சிகளில் 4,000 சதுர அடியில் இருந்து, 10,000 சதுர அடியாக கட்டடம் கட்டுவதற்கு, ஊராட்சி தலைவரே அனுமதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப நிலையை 'ஆன்லைன்' வழியே உடனுக்குடன் அறியவும், நகர்ப்புற ஊரமைப்பு துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சிகளில், கட்டடம் அனுமதி மற்றும் வீட்டுமனைப் பிரிவுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது.அதன்படி, 4,000 சதுர அடி குடியிருப்பு வீடு கட்டுவதற்கு அனுமதி மற்றும் 2,000 சதுர அடி வணிக கட்டடம் கட்டுவதற்கு அனுமதியை, ஊராட்சி தலைவர் வழங்கி வந்தார். மொபைல் எண் அவசியம்
சமீபத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு ஊராட்சிகள், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன.இதில், நகர்ப்புற ஊரமைப்பு துறையால், ஊராட்சி தலைவர்களுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.அதன்படி, 4,000 சதுர அடி குடியிருப்பு கட்டட அனுமதியில் இருந்து, 10,000 சதுர அடிக்கு அனுமதி மற்றும் 2,000 சதுர அடி வணிக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கலாம் என, நகர்ப்புற ஊரமைப்பு துறை வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, 10,000 சதுர அடி பரப்பளவில், எட்டு வீடுகள் கட்டிக் கொள்ளலாம். வாகன நிறுத்தத்துடன்கூடிய மூன்று தளங்களை 12 மீட்டருக்கு மிகையாமல் கட்டிக் கொள்ளலாம். தவிர, 2,000 சதுர அடி தரை தளத்துடன் கூடிய வணிக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கலாம்.இவை அனைத்தும், நகர்ப்புற ஊரமைப்பு துறையினரின் வழிகாட்டுதல் படி, https://onlineppa.tn.gov.in, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஊராட்சிக்கும் தனித்தனியாக உபயோகிப்பாளர் முகவரி மற்றும் கடவு எண் வழங்கப்படும்.'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், நில ஆவணம், பட்டா, வில்லங்க சான்று, வீட்டுமனை அங்கீகாரம், கட்டுமான மதிப்பீடு, கட்டுமான வரைபடம், மொபைல் எண் அவசியம் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.இதற்குரிய கட்டணத்தை, 'ஆன்லைன்' வாயிலாக செலுத்த வேண்டும். இதை, ஊராட்சி தலைவர் அளவீடு செய்து, மின்னணு கையெழுத்திட்டு அனுமதி வழங்குவார்.'ஆன்லைன்' வாயிலாக பணம் செலுத்துவதால், கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்காது என, புதிதாக கட்டடம் கட்டுவோர் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும், 'ஆன்லைன்' வாயிலாக அனுமதி பெறும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தால், 'கட்டிங்' கேட்டு கோப்புகளை கிடப்பில் போடுவது, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கவில்லை என, அதிகாரிகளிடம் கூறுவது உள்ளிட்ட பல்வேறு தில்லுமுல்லுகளை தவிர்க்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். முறைகேடு தவிர்க்க வழி
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊராட்சிகளில், 4,000 சதுர அடியில் இருந்து, 10,000 சதுர அடி கட்டடம் கட்டுவதற்கு, ஊராட்சி தீர்மானம் வைத்து தலைவர் அனுமதி வழங்கலாம். அதுவும், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இதில், விண்ணப்பதாரர்களே விண்ணப்ப நிலையை அறிந்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.மேலும், 'ஆன்லைன்' வாயிலாக பணம் செலுத்துவதால், முறைகேடு தவிர்க்க வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.