| ADDED : டிச 04, 2025 04:23 AM
காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கம் கூட்டுச் சாலையில், வேகத்தடைகள் மற்றும் வேக கட்டுப்பாடு கருவிகளை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். வாலாஜாபாத் - வண்ட லுார் வரை, 47 கி.மீ., நான்குவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, 2019ம் ஆண்டு தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், 175 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த சாலை நடுவே மைய தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிரதான கடவுப்பாதைகளில் எச்சரிக்கை தடுப்பு சாதனங்கள் இல்லை. நத்தாநல்லுார், தேவரியம்பாக்கம், அளவூர், வாரணவாசி ஆகிய பகுதிகளில் தானியங்கி சிக்னல் அமைக்கவில்லை. குறிப்பாக, வண்டலுார் மார்க்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் போது, லிங்காபுரம், சங்கராபுரம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், வாலாஜாபாத்- - வண்டலுார் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். எனவே, தேவரியம் பாக்கம் கூட்டுச் சாலையில், வேகத் தடைகள் மற்றும் வேக கட்டுப்பாடு கருவிகளை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.