சேதமடைந்த நெற்களம் சீரமைக்க கோரிக்கை
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மேனலூர் ஊராட்சியில், பாரதிபுரம் துணை கிராமம் உள்ளது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில், 1,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில், அறுவடை செய்யப்படும் நெல், வேர்க்கடலை ஆகியவற்றை உலர்த்த, 22 ஆண்டுக்கு முன் நெற்களம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.தற்போது, நெற்களம் முறையாக பராமரிப்பு இல்லாமல், தடுப்புச்சுவர் சேதமடைந்து உள்ளது. மேலும், நெற்கள தரை உடைந்த நிலையிலும் உள்ளது.இதனால், விவசாயிகள் நெல் மற்றும் வேர்க்கடலையை உலர்த்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், விளைபொருட்களை உலர்த்த போதிய இடம் இல்லாததால், அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று உலர்த்தி வருகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு நேர விரயம் ஏற்பட்டு வருகிறது.எனவே, சேதமடைந்த நெற்களத்தை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.