பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடிய கழிவுநீர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் இருந்து, பல்லவர்மேடு பகுதிக்கு செல்வோர் வணிகர் வீதி வழியாக சென்று வருகின்றனர். திருமண மண்டபம், தனியார் மருத்துவமனை, விதைகள் மற்றும் விவசாய உபகரணங்கள், எண்ணெய் செக்கு நிலையம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் வணிக வளாகம் உள்ளிட்டவை இந்த தெருவில் உள்ளன.இதனால், வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இத்தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடியது.இதனால், சாலையில் நடந்து சென்றவர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வேகமாக சென்ற வாகனங்களால் கழிவுநீர் தெளித்ததால், பாதசாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் வணிகர் வீதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.