வாலாஜாபாதில் செயல்படாத சிக்னலால் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ரவுண்டானா சாலையில், செயல்படாத சிக்னலால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. வாலாஜாபாத் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. அந்நேரங்களில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், அவர்களை அழைத்து செல்லும் பெற்றோர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என, ஒரே நேரத்தில் பயணிக்கின்றனர். இதனால், வாலாஜாபாத் சாலையின் ராஜவீதி மற்றும் பேருந்து நிலைய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, வாலாஜாபாத் ரவுண்டானா சாலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன. எனினும், அந்த சிக்னல்கள் செயல்படாமல் காட்சி பொருளாகவே இருக்கின்றன. இதனால், வாலாஜாபாத் சாலை பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், தொடர்ந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வாலாஜாபாத் சாலையின் முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களை முறையாக செயல்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.