பிரதான குழாயில் உடைப்பு திருக்காலிமேடில் குடிநீர் வீண்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருக்காலிமேடு பாலாஜி நகரில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள 1,060 தெருக்களில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக, மாநகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு பாலாஜி நகர், சிந்தாமணி விநாயகர் கோவில் அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள வீட்டு குழாயில், சேற்றுநீர் கலந்த கலங்கலான குடிநீர் வருவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, திருக்காலிமேடு பாலாஜி நகரில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.