| ADDED : ஆக 02, 2024 01:46 AM
கரூர், -''மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு, 6,397 இலவச சைக்கிள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சைக்கிள்களை வழங்கி கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளிகளில் முதல்வர் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நீங்கள் பள்ளி படிப்பு படிக்கின்ற காலங்களிலேயே பள்ளிப்படிப்பு தவிர, பிற தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டு சிறந்த சாதனையாளராக உருவாக வேண்டும். நீங்கள் தொடர்ந்து மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்து, உயர் கல்வி கல்லூரி படிப்பை படித்து வாழ்வில் உங்களை உயர்த்தி, அதன் மூலம் உங்கள் குடும்பத்தை உயர்த வேண்டும். நாடு வளம்பெற உதவிட வேண்டும். மாவட்டத்தை பொருத்தவரை, 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3.08 கோடி ரூபாய் மதிப்பில், 6,397 சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) கிருஷ்ணப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ. பள்ளி தலைமையாசிரியர்கள் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.