கரூர்:கரூர் அருகே அப்பிப்பாளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-மதுரை
தேசிய நெடுஞ்சாலையில் அப்பிப்பாளையம் பிரிவு உள்ளது. அதன் வழியாக,
கரூர் நகரப் பகுதியில் இருந்து, கருப்பம்பாளையம் சுக்காலியூர்,
செட்டிப்பாளையம், அப்பிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல,
மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டும்.அப்போது, தேசிய
நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள்
செல்வதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள்,
கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். அடிக்கடி அப்பகுதியில்
விபத்துகளும் நடக்கிறது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:கரூர்-மதுரை
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, அப்பிப்பாளையம் பிரிவில்
மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது, வாகன பெருக்கம்
அதிகரித்து விட்டதால், அப்பிப்பாளையம் உள்ளிட்ட, 20 க்கும்
மேற்பட்ட கிராமப்பகுதிகளில் இருந்து செல்லும் பொதுமக்கள், மதுரை
தேசிய நெடுஞ்சாலையை எளிதாக, கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், விபத்துகளை தடுக்க அப்பிப்பாளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.