| ADDED : ஜூலை 13, 2024 08:45 PM
கரூர்:கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், புதிய கழிப்பறை கட்ட வேண்டும் என, பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூர் வழியாக நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. மேலும், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, நாள்தோறும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், பயணிகள் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம், கரூர் நகருக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பாரங்களில் உள்ள கழிப்பறைகள் பெரும்பாலும் பூட்டப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில், புதிதாக நவீன வசதிகளுடன் பல ஆண்டுகளுக்கு முன், கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால், அதை விரிவாக்க பணிக்காக இடித்து விட்டனர்.இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள், தொடர்ந்து திறந்த வெளிப்குதியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் புதிய கழிப்பறைகளை கட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.