| ADDED : மார் 25, 2024 07:03 AM
கரூர் : லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணமின்றி, 50,000 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது. அதற்கான உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் பறக்கும் படையினரும், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினரும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, கரூர் சுங்ககேட் பகுதியில், நேற்று முன்தின் நள்ளிரவு, தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வாகனத்தில் வந்த வாசுகி என்பவர், 17.30 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்றார். பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுவரை, 35.62 லட்சம் ரூபாய் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.