கரூர்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு நடந்த ஆள் சேர்ப்பு தேர்வில், 2,662 பேர் பங்கேற்றனர்.கரூர் மாவட்டம், காக்காவாடியில் என்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரி, க.பரமத்தியில் வி.எஸ்.பி., பொறியியல் கல்லுாரிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆள் சேர்ப்பு தொடர்பாக தேர்வு நேற்று துவங்கியது. மையத்தை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.அப்போது, அவர், கூறியதாவது:தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், டவுன் பஞ்., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியங்களில் காலியாக உள்ள சிவில், எலக்ட்ரிக்கல், திட்டம், நகரமைப்பு அலுவலர் மற்றும் மெக்கானிக்கல் தொடர்புடைய உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட, 1,933 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நடந்தது. பாலிடெக்னிக்கல் கல்லுாரியில் பயின்று விண்ணப்பித்த, 1,346 தேர்வர்களும், தொழில்நுட்பக் கல்லுாரியில் பயின்று விண்ணப்பித்த, 1,316 தேர்வர்களும் என மொத்தம், 2,662 பேர் தேர்வு எழுதினர். இன்றும் தேர்வு நடக்கவுள்ளது.இவ்வாறு கூறினார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த, கரூர் மாவட்ட தேர்வு ஒருங்கிணைப்பாளர் டில்லிபாபு, தாசில்தார்கள் தனசேகரன் (புகழுர்), வெங்கடேசன் (அரவக்குறிச்சி) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.