கரூர் : கரூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்., வேட்பாளர் ஜோதிமணி, 1.66 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை விட, தற்போதைய லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., குறைவான ஓட்டுக்களையே பெற்றுள்ளது.கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட இளங்கோ, 93 ஆயிரத்து, 369 ஓட்டுக்களும், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., அண்ணாமலை, 68 ஆயிரத்து, 553 ஓட்டுக்களும் பெற்றனர். அ.ம.மு.க., 1,599, மக்கள் நீதி மய்யம், 1,382 ஓட்டுக்களை பெற்றனர். தி.மு.க., 24 ஆயிரத்து, 816 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த லோக்சபா தேர்தலில் அரவக்குறிச்சியில், காங்., வேட்பாளர் ஜோதிமணி, 87 ஆயிரத்து, 390 ஓட்டுக்களும், அ.தி.மு.க., தங்கவேல், 44 ஆயிரத்து, 342 ஓட்டுக்களும், பா.ஜ., செந்தில்நாதன், 19 ஆயிரத்து, 978 ஓட்டுக்களும், நாம் தமிழர் கருப்பையா, 8,959 ஓட்டுக்களும் பெற்றனர். அ.தி.மு.க.,வை விட காங்., 43 ஆயிரத்து, 48 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., அண்ணாமலை பெற்ற ஓட்டுக்களை விட, 24 ஆயிரத்து, 211 ஓட்டுக்கள் அ.தி.மு.க., இழந்துள்ளது. பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகியதால், அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.