| ADDED : ஜூன் 27, 2024 03:38 AM
கரூர்: தெற்கு காந்கிராமம் விளையாட்டு மைதானத்தில் உள்ள உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால் விளையாடும் போது காயமடைகின்றனர்.கரூர், தெற்கு காந்திகிராமில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு, விளையாட்டு மைதானம் உள்ளது. இது, வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடம் என்றாலும், மாநகராட்சி நிர்வாக பராமரிப்பில் இருக்கிறது. மைதானத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால், இலவச பார்க்கிங் பகுதியாக மாறியது. இரவு நேரங்களில் மைதான அரங்கத்தை சுற்றிலும், மது அருந்தி விட்டு குடிமகன்கள் பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். விளையாட்டு வீரர்கள், பயிற்சி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என, பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரியில், 40 லட்சம் ரூபாய் செலவில் கரூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, தனியார் வங்கி பங்களிப்பில் மைதானத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்தன. மைதானத்தை சுற்றி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நடை பயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.சிறுவர், சிறுமியர் பொழுதை கழிக்க விளையாட்டு உபகரணம் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு, குழந்தைகளை கவரும் வகையில் சறுக்கல், ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். தற்போது அந்த உபகரணங்கள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகிறது. சிறுவர்கள் விளையாடும் போது, காயமடைகின்றனர். அங்குள்ள சறுக்கல், ஊஞ்சல் பழுதடைந்துள்ளதால், குழந்தைகள் விளையாடும் போது கால்கள் சிக்கி கொள்கிறது.சேதமடைந்த உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.