| ADDED : ஆக 11, 2011 02:38 AM
கரூர்: அரசுக்கு சொந்தமான நிலங்கள், ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் ஆறு, ஏரி உள்ளிட்ட நிர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாய உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட் சி பொறுப்பை ஏற்றவுடன் நிலமோசடி தடுப்பு பிரிவுகள் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டது. இதையடுத்து கடந்த தி.மு.க., ஆட்சியின் போது நடந்த நிலஅபகரிப்பு தொடர்பாக வந்த புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். நாள்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலஅபகரிப்பு தொடர்பாக ஏராளமான புகார்கள் தி.மு.க., வினர் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மீது வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து, மாநகராட்சி முதல் கிராம பஞ்சாயத்து வரை அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் ஏரிகள், ஆறுகள் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் நுண்ணரிவு பிரிவு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் துறை பதிவேடுகளில் உள்ள அளவின்படி, தற்போது ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் இருக்கிறதா, அல்லது அதில் ஏதாவது ஆக்கிரமிப்பு உள்ளதா என்பது குறித்து நுண்ணரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், செய்யப்பட்டவர்களின் விபரம், ஆக்கிரமிப்பு செய்தவர் எந்த கட்சியை சேர்ந்தவர், தற்போது கட்சியில் உள்ள பொறுப்பு, வகித்து வரும் அரசு பதவி உள்ளிட்ட தகவல்களை உடனடியாக அனுப்பி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.