| ADDED : ஆக 11, 2011 02:43 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாதால் பூக்கள் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப விஷேசங்கள் இல்லாத நிலையிலும் பூக்கள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் மாயனூர், மனவாசி, தளவாளப்பாளையம், செட்டிபாளையம், லாலாப்பேட்டை, தாளியாம்பட்டி, முதலைப்பட்டி, சூரியனூர், வேங்கம்பட்டி, நெய்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களில் கரூர் தாலுக்கா பகுதிகளில் சாரசரிக்கும் குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. தமிழ் மாதங்களில் பொதுவாக ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப விஷேசங்கள் அதிகளவில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் வரத்து குறைவால் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ அரளி 50 ரூபாய்க்கு விற்றது. தற்போது 120 ரூபாய் வரை விற்கிறது. மல்லிகை 100 ரூபாயில் இருந்து 200 க்கும், முல்லை 120 லிருந்து 200 ரூபாய்க்கும், ரோஜா வகைகள் ஒரு ரூபாயில் இருந்து இரண்டு ரூபாயை விலை அதிகரித்துள்ளது. 'ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விஷேசங்கள் இல்லா விட்டாலும், ஆடி வெள்ளி கிழமை மற்றும் கிராமப்புறங்களில் அம்மன் திருவிழா அதிகளவில் நடந்து வருகிறது. இதனால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது' என கரூர் பூ மார்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.