போதை மகனிடம் பைக் பறிமுதல் சிக்னலில் தீக்குளிக்க முயன்ற தாய்
கோபி : கோபி சிக்னலில் நேற்று முன்தினம் இரவு, 7:10 மணிக்கு, கோபி போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் வந்த கோபியை சேர்ந்த சந்துரு, 24, என்பவரை நிறுத்தியபோது, போதையில் வந்திருப்பது தெரியவந்தது. அவரிடம் வாகன தணிக்கைக்கான அறிக்கை வழங்கினார். இதையறிந்த சந்துருவின் தாய், வளர்மதி, 50, வந்தார்.போக்குவரத்து போலீசாரிடம், மகன் மீது எதற்கு வழக்கு போட்டீர்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அபராதம் செலுத்த முடியாது, பைக்கை திருப்பி தர வேண்டும். இல்லையேல் தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி, கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடல் முழுக்க ஊற்றி கொண்டார். போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சந்துருவிடம் பைக்கை திருப்பி கொடுத்து, அவரையும், அவரது தாயையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிக்னலில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வளர்மதி மீது, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.