| ADDED : ஜன 03, 2024 12:41 PM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பாண்டமங்கலம் டவுன் பஞ்.,க்குட்பட்ட எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில் இருந்து, பாண்டமங்கலம் தண்ணீர் டேங்க் வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், பணிகளுக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து நடத்தி வந்தனர். இதனால், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து, டவுன் பஞ்., நிர்வாகம், வருவாய்த்துறையிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்துதரக்கோரி வேண்டுகோள் விடுத்தனர்.அதன்படி, நேற்று, பரமத்தி வேலுார் வருவாய்த்துறையை சேர்ந்த சர்வேயர் சுகந்தி, பூங்கோதை மற்றும் வருவாய் ஆய்வாளர் பூங்கொடி தலைமையில் பாண்டமங்கலத்தில் நில அளவை மேற்கொண்டனர். அப்போது, அளவீடு செய்து, குறியிட்டு காட்டி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.இதையடுத்து, எம்.ஜி.ஆர்., சிலை அருகே பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை, டவுன் பஞ்., நிர்வாகத்தினர் மற்றும் வருவாய்த்துறையினர் அகற்றினர். தொடர்ந்து, சாலை அமைக்கும் பணி நடந்தது.