ரயில்வே மேம்பாலம் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்
கரூர், ஜன. 4-கரூர் அருகே, ரயில்வே மேம்பாலத்தின் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.கரூர்-சேலம் இடையே கடந்த, 2013ம் ஆண்டு முதல் புதிதாக ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டு வந்தே பாரத் உள்ளிட்ட, பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.ரயில்வே வழித்தடத்தின் குறுக்கே, மண்மங்கலம்-வாங்கல் சாலை இடையே மாரிக்கவுண்டன் பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் வலது மற்றும் இடதுபுறத்தில் இணைப்பு சாலை அமைக்கப்படாமல் உள்ளது.அந்த பகுதிகளை, பலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களை கட்டியுள்ளனர். அதை அகற்றி கொள்ள ரயில்வே துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.இந்நிலையில், நேற்று மண்மங்கலம் தாசில்தார் குணசேகரன் தலைமையில், ரயில்வே அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றினர். வாங்கல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.