கரூர்: அமராவதி ஆற்றின் மையப் பகுதியில், மீண்டும் மணல் திருட்டு ஜோராக நடந்து வரும் நிலையில், அதை தடுக்க வருவாய் துறை, காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பகுதிகளில், மணல் குவாரிகள் அமைக்கக்கூடாது என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டிகளில், இரவு நேரங்களில் மணல் அள்ளி செல்வதை, வருவாய் துறை, காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அவ்வப்போது, பெயருக்கு சில வழக்குகள் மட்டும் போலீசார் தரப்பில் பதிவு செய்யப்படுகிறது. மழை காரணமாக, அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, ஆற்றின் ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் செல்லும் நிலை உள்ளது. இதனால், மறுபக்கம் கரையோரம், மைய பகுதிகளில் தண்ணீர் செல்லாத இடங்களில், இரவு நேரத்தில் மணலை அள்ளி செல்ல வசதியாக, மணலை மர்ம நபர்கள் குவித்து வைத்துள்ளனர். ஆற்றில் குறைந்தளவு தண்ணீர் செல்வதை பயன்படுத்தி, கரூர் மாவட்டத்தில், ராஜபுரம், சின்னதாராபுரம், அணைப்பாளையம், சுககாலியூர் பெரிய ஆண்டாங்கோவில், கோயம்பள்ளி பகுதிகளில், மாட்டு வண்டிகள் மூலம், மணல் திருட்டு மீண்டும் கன ஜோராக துவங்கியுள்ளது. அதை, வருவாய் துறை, காவல் துறையினர் கண்டுகொள்ளாமல், கும்ப கர்ண துாக்கத்தில் உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.