ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேர்ப்பேட்டை, தெப்பக்குளம் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 27, சென்ட்ரிங் தொழிலாளி; அதே பகுதியை சேர்ந்த, அ.தி.மு.க., உறுப்பினர் ஆதி, 29; ஓசூர் மாநகர தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் பாலாஜி, 36; கடந்த, 2ம் தேதி மாலை, ராயக்கோட்டை சாலையில் ஒரு கடையில், சுரேஷ் சிகரெட் பிடித்து கொண்டிருந்தார். அங்கிருந்த ஆதி, பாலாஜி ஆகியோர் தள்ளி நின்று புகை பிடிக்குமாறு கூறியதில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேஷ், இருவர் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளார்.பின் அங்கிருந்து சென்ற சுரேஷ், ஆதியை மொபைல்போனில் மிரட்டி, எழில் நகரிலுள்ள காலி இடத்துக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்ற ஆதி, பாலாஜியுடன் சேர்ந்து, சுரேஷை கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த சுரேஷ், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3ம் தேதி இரவு, 11:30 மணிக்கு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார், ஆதி மற்றும் பாலாஜியை கடந்த, 2ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.