ஓசூர்: தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் காரில், 6.38 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் சிக்கியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி, எஸ்.வி., தெருவை சேர்ந்தவர் சாய்கீதா, 58; கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர். பத்திரப்பதிவுகளுக்கு அலுவலகத்துக்கு வெளியே புரோக்கர் மூலம் லஞ்சம் பெற்று, இரவில் ஊருக்கு செல்லும்போது பணத்தை கொண்டு செல்வதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நிறைய புகார் சென்றது. இதன் அடிப்படையில் அவரை பிடிக்க, தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் அருகே, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., வடிவேல் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு, 9:00 மணிக்கு அலுவலகத்தில் இருந்து ஹூண்டாய் கிரெட்டா காரில் சாய்கீதா புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்து போலீசார் சென்றனர். கெலமங்கலம் சாலையில் ஒருவர் காரை நிறுத்தி பையை கொடுத்தார். உஷாரான லஞ்ச ஒழிப்பு போலீசார், சாய்கீதா காரை சிறது துாரத்தில் மடக்கி பிடித்தனர். பையில் இருந்த பணம் குறித்து கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பேசவே, மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். பையில், 6.38 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். துறை ரீதியாக விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.'இது தான் டெக்னிக்'
தொழில் நகரான ஓசூர் வேகமாக வளர்ந்து வருவதால், இப்பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை சுற்றுப்புறங்களிலும் நிலங்களின் மதிப்பு உயர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறக்கிறது. தினமும் நுாற்றுக்கணக்கான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.சார்பதிவாளர்கள் ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெறுகின்றனர். இந்த பணத்தை வசூலிக்க புரோக்கர்களை நியமித்துள்ளனர். அலுவலகத்துக்கு வெளியே வசூலித்து, வீட்டுக்கு செல்லும்போது பெற்றுக் கொள்கின்றனர். இந்த டெக்னிக்கைத்தான் பெரும்பாலான சார்பதிவாளர்களும் கடைபிடிக்கின்றனர்.