உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தக்காளி, நெற்பயிரை நாசம் செய்த யானைகள் சோலார் வேலி அமைக்க விவசாயிகள் கோரிக்கை

தக்காளி, நெற்பயிரை நாசம் செய்த யானைகள் சோலார் வேலி அமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஓசூர் :தேன்கனிக்கோட்டை அருகே, தக்காளி, நெற்பயிரை யானைகள் நாசம் செய்தன. இதனால் வனத்தை சுற்றி சோலார் வேலி அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெட்டமுகிலாளம் வனத்தில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. இரவில் உணவு மற்றும் தண்ணீர் தேடி, கிராமங்களை நோக்கி வெளியேறும் யானை கூட்டத்தால், வனத்தை ஒட்டிய கிராமங்களில் பயிர்கள் நாசமாவது தொடர்கிறது.நேற்று முன்தினம் பெட்டமுகிலாளம் வனத்திலிருந்து வெளியேறிய இரு யானைகள், அப்பகுதி நாகராஜ் என்பவரது விவசாய நிலத்திற்குள் புகுந்தன. அங்கு தலா ஒரு ஏக்கரில் சாகுபடி செய்திருந்த தக்காளி மற்றும் நெல் வயல்களில் இறங்கி, பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. மேலும், 5 தென்னை மரங்களையும் சேதப்படுத்தின. பின்னர், அதிகாலையில் மீண்டும் வனத்திற்குள் சென்றன. நேற்று காலை சேதமான பயிரை பார்த்து விவசாயி நாகராஜ் அதிர்ச்சியடைந்தார். தக்காளிக்கு தற்போது நல்ல விலை கிடைப்பதால், வனத்துறையினர் உடனடியாக சேதமான பயிரை பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். யானைகளால் தொடர்ந்து பயிர்கள் சேதமாகி வருவதால், அவை விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க, வனத்தை சுற்றி சோலார் வேலி அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை