உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு அதிக நீர் திறப்பால் 2வது நாளாக வெள்ள அபாய எச்சசரிக்கை

கே.ஆர்.பி., அணைக்கு அதிக நீர் திறப்பால் 2வது நாளாக வெள்ள அபாய எச்சசரிக்கை

கிருஷ்ணகிரி, தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சியால், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெய்து வரும் மழையாலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையாலும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, 4,208 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், மழை குறைந்ததால் நேற்று, 3,268 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து பிரதான ஒரு ஷட்டர் மற்றும், 3 சிறிய மதகின் மூலம் தென்பெண்ணை ஆற்றில், 3,559 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.85 அடியாக உள்ளதாலும், அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், 2வது நாளாக நேற்றும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை என, 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என்றும், ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், கே.ஆர்.பி., அணை தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், 2வது நாளாக அணை பகுதிக்கு வர பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை