லாரி - பைக் மோதி விபத்து அரசு மருத்துவமனை டாக்டர் பலி
ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் பூவரசன், 26. அங்கு மருந்தாளுனராக வேலை செய்பவர் பிரபு, 27. இவர்கள் இருவரும், உள்ளு குறுக்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாலை, 6:30 மணிக்கு, நோயாளிகளை கவனிக்க, பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றனர். டாக்டர் பூவரசன் பைக்கை ஓட்டினார்.ராயக்கோட்டை சாலையில், முத்தம்பட்டி - உள்ளுகுறுக்கை இடையே சென்ற போது, எதிரே வந்த லாரியும், பைக்கும் மோதிக்கொண்டன. இதில் டாக்டர் பூவரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மருந்தாளுனர் பிரபு தலையில் படுகாயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.