| ADDED : ஜூன் 07, 2024 12:22 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில், கிராம தேவதையான பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள், மர்ம நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை மீட்க வேண்டும் என, இந்து அமைப்புகள், ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.அதன்படி, ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சாமிதுரை, ஆய்வாளர் வேலுராஜு, நில அளவை தாசில்தார் மோகன், வி.ஏ.ஓ., மஞ்சுநாத், எஸ்.ஐ., தினேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர் சென்னபசப்பா, ஹிந்து முன்னணி பிரமுகர்கள் ஆகியோர் முன்னிலையில், நிலத்தை அளவீடு செய்து அதற்கான உரிய எல்லை கற்களை பதித்தனர்.இதன் மூலம் முதல் கட்டமாக, 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, கோவில் நிலங்களுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கோவிலுக்கு சொந்தமான மீதமுள்ள நிலங்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.