கி.கிரி அரசு மகளிர் கல்லுாரியில் பாரம்பரிய உணவு கண்காட்சி
கிருஷ்ணகிரி, டிச. 12-கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், 'உணவே மருந்து' உணவு திருவிழாவை, மாவட்ட கலெக்டர் சரயு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பாரம்பரிய உணவு கண்காட்சியை பார்வையிட்டார்.பொதுமக்கள் அனைவரும் நோயின்றி வாழவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்தான உணவு, சரிவிகித உணவு பழக்க வழங்கங்களை கடைபிடிக்கும் வகையில், உணவு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நேற்று நடந்த உணவு திருவிழாவில் அன்றாட வாழ்க்கையில் நம் வீட்டில் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படம் குறித்து கண்டறிதல், சத்தான உணவு உட்கொள்ளுதல், வளரும் இளம்பெண்களுக்கான உணவு வகைகளும், கர்ப்பிணிகளுக்கான உணவு வகைகளும், ரத்த சோகையை கட்டுப்படுத்துவதற்கான உணவு வகைகள் குறித்த, 12 அரங்குகள் அமைக்கப்பட்டன. இதில் கல்லுாரி மாணவியர், 2,500 பேர், பொதுமக்கள், நுகர்வோர் அரங்கத்தை பார்வையிட்டு, உணவு வகைகள் குறித்து அறிந்தனர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கீதா, கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி, கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவர் காயத்ரி கோவிந்தராஜ், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.