| ADDED : செப் 27, 2011 04:22 AM
மதுரை: மண்ணெண்ணெய் கேட்டு, மதுரையில் பொதுமக்கள் முற்றுகை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.மதுரை கரும்பாலை, ஷெனாய்நகர், ஆழ்வார்புரம், தல்லாகுளம் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். கடந்த நான்கு மாதங்களாக மண்ணெண்ணெயை சீராக வினியோகிப்பதில்லை, என புகார் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ''மண்ணெண்ணெய் வாங்கச் செல்வோரிடம் டோக்கன் வழங்கப்படுகிறது. அதை மறுமாதம் கொடுத்து மண்ணெண்ணெயை வாங்கும்படி கூறுகின்றனர். மறுமாதமும் தரவில்லை,'' என்றனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
போலீசார் அவர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.சாலை மறியல்: மதுரை சுந்தரராஜபுரத்தில் மண்ணெண்ணெய் கேட்டு நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி அவர்களிடம் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தார்.அதிகாரிகள் கூறுகையில்'போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டதால், காஸ் இணைப்பு உள்ளவர்களுக்கு மண்ணெண்ணெய் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு குறைந்துள்ளது. இருப்பினும் போலி கார்டுகள் ஒழிக்கப்பட்டதால், பாதிப்பின்றி 'சப்ளை' செய்ய முடிகிறது,' என்றனர்.