உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதில் இழுத்தடிப்பு மாநகராட்சியில் ஒரு மந்த பிரிவு

பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதில் இழுத்தடிப்பு மாநகராட்சியில் ஒரு மந்த பிரிவு

மதுரை: மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு, திருத்தம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் மந்தமாக நடப்பதால் மக்கள் பாதிக்கின்றனர்.சுகாதார பிரிவின் கீழ் வரும் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு பிரிவில் சான்றிதழ் பதிவு, பெயர் திருத்தம் உள்ளிட்டவை தொடர்பாக தினமும் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் வருகின்றன. பிறப்பு, இறப்புகளை 20 நாட்களில் பதிவு செய்தால் மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் இலவசமாக சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு மேல் சென்றால் ரூ.200 அபராதம் செலுத்தி மைய அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும்.இதுபோல் பிறப்பு, இறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம், நீக்கம் செய்ய மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெறலாம். அதற்கான பதிவேடுகள் வைப்பறை பிரிவு தரைத்தளத்தில் செயல்படுகிறது. இங்கு உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பித்தாலும் சான்றிதழ் பெறுவது குதிரைக் கொம்பாக உள்ளது என மக்கள் நொந்துகொள்கின்றனர்.பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: இப்பிரிவில் 'போதிய ஊழியர்கள் இல்லை. சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்படத்தான் செய்யும்' என்கின்றனர். நகர்நல அலுவலகம், புள்ளியியல் பிரிவு, ஆவணங்கள் வைப்பறை பிரிவு அலுவலர்களுக்குள் போதிய ஒத்துழைப்பு இல்லை. ஆவணங்கள் வைப்பறை பிரிவில் திறமை இல்லாத ஊழியர்களால் சான்றிதழ்கள் நகர்நல அலுவலர் பிரிவுக்கு வருவதற்குள் பெரும் போராட்டமாக உள்ளது. இணைத்து வழங்கப்படும் ஆவணங்களை சிலர் தொலைத்துவிட்டு அலைக்கழிக்கின்றனர் என்றனர்.அதிகாரி ஒருவர் கூறியதாவது: இச்சான்றுகளை இணையதளத்தில் விண்ணப்பித்தும் பெறலாம். பிறப்பு இறப்பு சான்று, திருத்தம் உள்ளிட்ட பணிகளுடன் போக்சோவில் கைதாவோரின் வயது அறிதல், குற்ற வழக்குகள், விஜிலென்ஸ், பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்பத்திற்கான உண்மை தன்மை சான்று வழங்குதல், தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான பதில் அளித்தல் பணிகள் என கூடுதல் சுமையாக உள்ளது. தேவையான, திறமையான ஊழியர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ