உதவி பேராசிரியர் சம்பள விவகாரத்தில் மேல்முறையீடு செய்து விளையாடுவதா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு
மதுரை: திருநெல்வேலி சாரா டக்கர் கல்லுாரியில், புஷ்பலதா கிரேஸ்லின் உட்பட சிலர், உதவி பேராசிரியர்களாக அரசின் அனுமதியுடன் 2009ல் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களுக்கு கடந்த 2020ல் ஒப்புதல் அளித்த திருநெல்வேலி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர், மறுநாளே ஒப்புதலை திரும்ப பெற்றார்.இதை எதிர்த்து உதவிப் பேராசிரியர் உயர்நீதிமன்றத்தில் வழக்க தாக்கல் செய்ததும், ஒப்புதலை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்து, சென்னை கல்லுாரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.இதை பதிவு செய்த உயர்நீதிமன்றம், 'சம்பளம் வழங்குவதற்கான பரிந்துரையை அரசிடம் கல்லுாரி சமர்ப்பித்து 4 வாரங்களில் சம்பளம் வழங்க வேண்டும்' என, 2021ல் உத்தரவிட்டு பைசல் செய்தது.மனுதாரர்களுக்கு 2022 ஜூலை முதல் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், உதவி பேராசிரியர்கள், '2009 ஜூன் 17 முதல், 2022 ஜூன் வரை சம்பளம், சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, உதவி பேராசிரியர் சம்பள விவகாரத்தில் மேல்முறையீடு செய்து விளையாடுவதா? என கேள்வி எழுப்பி, அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்தனர். மேலும் ஒவ்வொரு முறையீட்டு மனுவிற்கும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினர்.